News & Ad contact: 75025 54555
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு :
16 வயது சிறுமியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாகப் புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கருப்பையா (45) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை செய்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, இன்று கருப்பையாவை குற்றவாளி என உறுதி செய்து தண்டனைகளை வழங்கினார்: சிறுமியைக் கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் மேற்படி தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சிகளைச் சரியாக ஆஜர்படுத்தித் தண்டனை பெற்றுத் தந்த விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன், வழக்கைச் சிறப்பாகப் புலனாய்வு செய்த அப்போதைய ஆய்வாளர் கலா, நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜூடு ஏஞ்சலோ மற்றும் உதவி புரிந்த தலைமை காவலர்கள் ஸ்டெல்லா மேரி, சங்கீதா ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமதன் பாராட்டினார்.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-