பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (ஜூன் 8) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.
இதன் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அந்த நாட்டில் உள்ள மிண்டானாவ் தீவுப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக களத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், சுனாமி பேரலை எழலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மிண்டானாவ் பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மனியின் புவி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.3-ல் இருந்து 8.2 என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அது 7.8 என்பதை ஜெர்மன் ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்தது.
இதையடுத்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் சர்வதேச முகமைகள் சில சுனாமி எச்சரிக்கை விடுத்தன.
கடலோரம் வசிக்கும் மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் வழக்கமான கடல் அலைகளின் உயரத்தை காட்டிலும் சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தைவான், ஜப்பான், குவாம், பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான அலைகள் எழலாம் என தெரிவிக்கப்பட்டது.
கருத்துக்கள்