நீட் தேர்வுக்கு எதிராக சென்னையின் சில பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல காவல்துறை தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மெரினா கடற்கரையில் திரண்டு போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்று மெரினாவில் பெருமளவில் ஒன்று கூடி நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த சில மாணவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, மெரினா பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு துணை காவல் ஆணையர்களின் தலைமையில் சுமார் 200 போலீசார் மெரினா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போராட்டம் தொடர்பான சூழ்நிலையை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பொதுமக்கள் தேவையற்ற வகையில் மெரினா பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது
கருத்துக்கள்