வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், சிஜேபி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்தது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “எங்கள் இளம் நண்பர்கள் அனைவருக்கும் இது ஒரு திறந்த அழைப்பு.
உங்கள் வசதிக்கு ஏற்ப, எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவின் அலுவலகத்திலோ அல்லது இல்லத்திலோ - இவ்விரண்டில் நீங்கள் விரும்பும் இடத்தில் - பேச்சுவார்த்தை நடைபெறும்.
இந்த விவகாரத்தில் நாங்கள் கவுரவம் பார்க்கவில்லை.
பேச்சுவார்த்தையின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவும் நானும் உடனிருப்போம்.
படிப்படியாக பேச்சுவார்த்தை மூலம் நாம் தீர்வை நோக்கி முன்னேறுவோம்.
மாணவர்களின் நலனுக்காக அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த பேச்சுவார்த்தை இருக்கும்.
எனவே, பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு உங்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த சிஜேபி பிரதிநிதி சவுரவ் தாஸ், பேச்சவார்த்தையை பொது இடத்தில் நடத்த வேண்டும்.
ஒன்று, ஜந்தர் மந்தரில் நடத்தலாம்.
இல்லாவிட்டால், கான்ஸ்டியூஷன் கிளப்பில் நடத்தலாம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பேச்சுவார்த்தையை கான்ஸ்டியூஷன் கிளப்பில் நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.
நட்டா மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
சிஜேபி சார்பில், சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா, அபிஜீத் தீப்கே, தீபக் பால்யன் ஆகியோர் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துக்கள்