News Image
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: ரூ.2.75 லட்சம் பறிமுதல் - 8பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றவர்களிடம் இருந்து சுமார் ரூ.2.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 16-வது சட்டப்பேரவை தேர்தல் நாளை ஏப்ரல் 23-ம் நாள் நடைபெறவிருக்கிறது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி நகரில் வருமான வரித்துறை அலுவலர் சங்கர் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்திய போது அந்த பகுதியில் அதிமுக வட்ட செயலாளர் ராமச்சந்திரன் (40), ரமேஷ் (24), முருகன் (26) சுப்ரமணியன் (30) ஆகிய 4பேர்களிடம் ரூ.1 லட்சத்து 17ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகிலுள்ள பன்னீர்குளம் கிராமத்தில் இன்று அதிகாலை வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவல் படி உள்ளாட்சி தணிக்கை நீதித்துறை ஆய்வாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் வந்து சென்று விசாரணை செய்தபோது ஒரு நபர் தனது கையில் வைத்திருந்த ரூபாய் 50 ஆயிரத்தை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டார்.

உடனே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பன்னீர்குளத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் செல்வகுமார் (45) என்பவரைத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அல்லிக்குளம் ரோட்டில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இன்ஜினியர் பத்மாவதி தலைமையிலான குழுவினர்கள் சோதனை நடத்திய போது திருச்செந்தூர் கல்விளையைச் சேர்ந்த கோபால் மகன் இசக்கி நாதன் (32) என்பவரிடம் இருந்து 40,000, ஆழ்வார்திருநகரி நடுத்தெருவை சேர்ந்த ஞானராஜ் மகன் வைத்தியலிங்கம் (30) என்பவரிடமிருந்து 19,240 பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டப்பிலாரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக இருவர் மீதும் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் பொன்மாரி தலைமையிலான குழுவினர்கள் திருச்செந்தூர் மெயின் ரோடு முனியசாமிபுரம் பகுதியில் சோதனை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் மாரியப்பன் (31) என்பவரிடம் இருந்து 48 ஆயிரத்து 700 ரூபாய், லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மதுரை மகன் மணிகண்டன் (29) என்பவரிடமிருந்து 45 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



6

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad