News & Ad contact: 75025 54555
சாக்கு மூட்டையில் ரூ.35.72 லட்சம் : பறக்கும் படை சோதனையில் சிக்கியது :
கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட ரூ.35.72 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று கோவில்பட்டி - கடலையூர் சாலையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையுடன் வந்த இளைஞர் ஒருவரைப் போலீசார் மறித்துச் சோதனை செய்தனர்.
சோதனையில், அவர் வைத்திருந்த சாக்கு மூட்டைக்குள் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து உடனே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் தலைமையிலான குழுவினர், பணத்தைக் கொண்டு வந்த கோவில்பட்டி அத்தைகொண்டான் இந்திரா நகரைச் சேர்ந்த கந்தசாமி மகன் உத்தரகுமாரிடம் (32) விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவரிடம் இருந்த ரூ.35 லட்சத்து 72 ஆயிரத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மேலதிக விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்களின்றி சாக்கு மூட்டையில் இவ்வளவு பெரிய தொகை கடத்தப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-