News & Ad contact: 75025 54555
பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு: யூடியூபர் முத்தார் மீது நீதிமன்றத்தில் வழக்கு : விசாரணைக்கு ஏற்பு
பெருந்தலைவர் காமராஜர் பற்றி அவதூறு பரப்பியதாக 'மை இந்தியா' யூடியூப் சேனல் உரிமையாளர் முத்தார் மற்றும் அவரது குழுவினர் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த 30.11.2025 அன்று 'மை இந்தியா' என்ற யூடியூப் சேனலில், அதன் உரிமையாளர் முத்தார் அகமது பெருந்தலைவர் காமராஜர் குறித்தும், நாடார் சமுதாயம் குறித்தும் எவ்வித ஆதாரமுமின்றி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சாதி மோதல்களை உருவாக்கி, பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்த அவதூறு பரப்பப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாகத் தூத்துக்குடி நாடார் மகாஜன சங்க மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து, வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் மூலம் தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-இல் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (22.04.2026) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் பாலகிருஷ்ணன் சார்பாக வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றி அவதூறு பரப்பி, தேச விரோதச் செயலில் ஈடுபட்ட முத்தார் அகமது, அவரது மேலாளர், எடிட்டர் மற்றும் கேமராமேன் ஆகியோருக்குச் சட்டப்படி தண்டனை பெற்றுத் தரும் வரை நாங்கள் ஓயமாட்டோம்." என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது நாடார் மகாஜன சங்க மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், தற்போது நீதிமன்றப் படி ஏறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-